Find us on Google+ December 2011 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Thursday 29 December 2011

கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய ஓர் விழிப்புணர்வு

உலக வரலாற்றின் பக்கங்களில் ரசாயன நெடி பூசிய செர்னோபில் கொடூரம் அரங்கேறி, 25 வருடங்கள் ஆகிவிட்டன. ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து நடந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் அந்த இடத்தில் கதிர் வீச்சின் வீரியம் குறையவில்லை. ஆனால், அந்தக் கொடூர அனுபவத்தில் இருந்து இந்த உலகம் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை... அல்லது கற்றுக்கொள்ள முயலவில்லை என்பது இன்னும் உறையச் செய்யும் அதிர்ச்சி!


அதிலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள்... அவற்றில் கூடுதலாக இன்னும் சில அணு உலைகள் என விபரீதங்களுக்கு வரிசையாகக் கால்கோள் விழா எழுப்பிக்கொண்டு இருக்கிறோம்!

கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் தமிழகத்துக்கு விளைந்த நன்மை, தீமைகள் என்னென்ன

புவனேஸ்வரி. துறுதுறுவென விளையாடித் திரிய வேண்டிய நான்கு வயதுச் சிறுமி. குடிசையின் ஒரு மூலையில் சுருண்டுகிடந்தாள். ஒரு கையும் காலும் இல்லை. முகத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள். குடிசையை விட்டு வெளிச்சத்துக்கு அவளைத் தூக்கி வந்தாலே... அழுகிறாள்.

தொடக்கப் பள்ளியில் நான்காவது படிக்கிறாள் பவித்ரா. படிப்பில் படு சுட்டி. டாக்டர் கனவு காண்கிற பவித்ராவுக்கு, கால்களில் வலு இல்லை. சுயமாக நடக்க முடியாது. நடக்கிற போது கால்கள் இரண்டும் பின்னிக்கொள்கின்றன. தாய் மட்டுமே துணை. துணை இன்றி ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது. ஓடும் கால்கள், நடக்கும் கால்கள், குதிக்கும் கால்கள் என விளையாடும் நண்பர்களின் கால்களை, மைதானத்துக்கு வெளியே இருந்து ஏக்கத்துடன் பார்க்கிறாள்.

விஜிக்கு 22 வயது. தன் வயதுப் பெண்கள் எல்லாம் குழந்தை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்க, இவருக்கோ மூன்று முறை கரு கலைந்து போனது. 6 மாதங்கள் வரை வயிற்றில் கரு தங்கி, கலைந்துபோனது மூன்று முறையும். மருத்துவர் களால் என்ன காரணம் எனக் கண்டறியப்பட வில்லை.

இப்படி அந்தக் கிராமங்களில் பத்து வீடுகளுக்கு நான்கு வீடுகளில் ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தை இருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் சந்திக்கும் உடல்ரீதியான பிரச்னைகள்பற்றி ஆய்வு செய்திருக்கிற அணு சக்தி எதிர்ப்பாளரும், மருத்துவருமான புகழேந்தி சில முக்கியத் தகவல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.ல் நான் ஒரு ஆய்வை மேற்கொண்டபோது, அதில் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர் குடும்பங்களில் உள்ளவர்கள் Multiple Myeloma எனும் எலும்பு மஜ்ஜைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது, மூன்று பேர் 21 நாள் இடைவெளியில் இந்தப் புற்றுநோயால் அடுத்தடுத்து இறந்துபோனார்கள். எனவே, புள்ளியியல் அடிப்படையில் மிக முக்கியத்துவம் (Statistically Highly Significant) வாய்ந்தது என்று அந்த மரணங்களைப் பதிவு செய்தேன்.

அதை எதிர்த்து, 'அப்படி எல்லாம் ஒன்றும் பாதிப்பு இல்லை' என்று அணு மின் நிலையத்தார் அப்போது ஓர் ஆய்வை மேற்கொண்டதாகச் சொன்னார்கள். அந்த ஆய்வு அறிக்கை நகல் ஒன்றைத் தாருங்கள் எனப் பல ஆண்டுகளாகக் கேட்டும், அவர்கள் தரவில்லை. கதிர் வீச்சின் பாதுகாப்பான அளவு (Safe Dose) குறித்து நான் அந்தப் பகுதி முழுக்க ஆய்வு மேற்கொள்ள முற்பட்டேன். அதற்காக, எங்களுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்த சில தொண்டு நிறுவனங்கள், என்ன காரணத்தினாலோ கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டன. மிரட்டல் காரணமாக இருக்கலாம். அணு மின் பணியாளர்கள் உள்வாங்கும் External & Internal Dose பற்றி நான் ஆய்வு நடத்தவும் அவர்கள் வாய்ப்பு அளிக்கவில்லை.

2010-
ம் ஆண்டில் டிராஃபிக் ராமசாமி என் ஆய்வுகளை அடிப்படையாகவைத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை புற்று நோயால் இறந்தவர்களின் பட்டியலைக் கேட்டு இருந்தார். அணு மின் நிலையத்தார், 10 வருடக் காலகட்டத்தில் இதுவரை 244 பேர் புற்று நோயால் இறந்திருக்கிறார்கள் என்றுதெரிவித்தார்கள். அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஓம் பால் சிங்கின் மகன் என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவர் Ewig Sacome எனும் எலும்பு மஜ்ஜை நோயால் தாக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி, அவர் இறந்துவிட்டார். அணு சக்தித் துறையில் மிக முக்கியமானவராக இருக்கும் ஒருவரின் மகன் இறந்ததைக்கூட, அவர்கள் தந்த புள்ளிவிவரத்தில் பதிவு செய்யவில்லை. 244 கேஸ்களில் இந்த இறப்புபற்றி ஒரு செய்தியும் இல்லை.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நியூஸிலாந்து நாட்டில் கிறிஸ்ட் சர்ச் என்னும் இடத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 65 பேர் உயிரிழந்தனர். நில நடுக்கப் பதிவேடுகளில், அந்த இடத்தில் நில நடுக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனப் பதிவு செய்யப்பட்டு இருந்தபோதும் அங்கே நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை Blind Fault என்று அழைப்பர். கல்பாக்கம் பகுதியிலும் Blind Fault ஏற்பட வாய்ப்பு இல்லையா? முன்பு சென்னை நில நடுக்க அளவு 1-ல் இருந்தது. அதனால், நில நடுக்க அளவு 2-க்கு ஏற்றாற்போல, அணு உலையைக் கட்டி இருப்பார்கள். இன்று சென்னையின் நில நடுக்க அளவு 3-க்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு ஏற்றபடி அணு உலையில் என்னென்ன மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்? 'நிச்சயமாக நாங்கள் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்வோம்' என்கிறார்கள் அணு நிலையத்தார். ஆனால், அந்த ஆய்வு யாரால் நிகழ்த்தப்படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்கிறார் புகழேந்தி.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அணு மின் நிலைய இயக்குநர் கே.ராமமூர்த்தியும், 'கிரீன் பீஸ்' அமைப்பின் அணு சக்திக்கு எதிரான செயல்பாட்டாளர் கருணா ரெய்னாவும், 'அணு மின் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு' பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள். கருணா முன்வைத்த எந்த ஒரு கருத்தையும் ராமமூர்த்தி மறுக்கவில்லை. அவர் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் தெரிவிக்கவில்லை.நிகழ்ச்சியில், ''பாதுகாப்பான அளவு கதிர் வீச்சு பற்றிப் பேசுகிறீர்களே... உங்கள் பணியாட்கள் உள் வாங்கும் கதிர் வீச்சின் அளவு என்ன?'' என்று நான் கேட்டதற்கு, ''அதுபற்றி எனக்குத் தெரியாது. அது தொடர்பான நிபுணர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்!'' என்றார். அணு மின் நிலையத்தின் இயக்குநராக இருப்பவருக்கு, இந்த சாதாரணத் தகவல்கூடத் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இவரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு நடை முறைகள் எந்த அளவுக்கு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே, உதறலாக இருக்கிறது!

மேலும் தன் உரையில் அவர், ''ஒருவேளை விபத்து ஏற்பட்டால், நிலையத்தில் இருந்து 1.6 கி.மீ. வரை என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்கேற்றபடி நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பிட்ட கி.மீ-க்கு மேல் சென்றால், அது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும். விபத்து ஏற்பட்டவுடன் நான் அவருக்குத் தகவல் தெரிவிப்பேன். அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றார் 'பொறுப்பாக'!

ஒருவேளை அப்படி விபத்து ஏற்பட்டால், மக்களை வெளியேற்ற என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, ''நிலைய அலுவலர்களுக்கு, பணியாளர்களுக்கு எனத் தனித்தனியாக வாகனங்கள் வைத்திருக்கிறோம். அதில் அவர்களை ஏற்றி பத்திரமான இடங்களுக்குக் கொண்டுசெல்வோம்!''

''
எத்தனை வாகனங்களை வைத்திருக்கிறீர்கள்?''

''
ஏறக்குறைய 54 பேருந்துகள்!'' பேருந்துக்கு சுமார் 100 பேரை அமுக்கித் திணித்தாலும் அதிகபட்சம் 5,400 பேரை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியும். ஆனால், அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 10,000-க் கும் மேல்!

''
உங்கள் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீங்கள் 'ரிஸ்க் அலவன்ஸ்' தருவது இல்லையாமே?'' என்ற கேள்விக்கு, ''ஆம், தருவது இல்லை. காரணம், நாங்கள் அவர்களுக்கு எந்த ரிஸ்க்கும் தருவது இல்லை!'' என்றார் ஜோக் அடித்த தொனியில்!

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்காக, நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் நகரியம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். 5 கி.மீ. தூரத்துக்குள் உள்ள ஐந்து கிராமங்களில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

1986,
மார்ச் மாதம் இந்த நிலையத்தில் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் எரிந்துபோனது. ஜூன் மாதத்தில் 15 டன் கன நீர் கசிந்து வழிந்தது. 1999, மார்ச் 26 அன்று, அணு மின் நிலையம் 2-ல் ஏற்பட்ட கன நீர் கசிவு காரணமாக, ஏழு பேர் அதிகபட்சக் கதிர் வீச்சுப் பாதிப்புக்கு ஆளானார்கள். 2011, மார்ச் 19 அன்று அணு உலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கார்த்திக் என்ற பணியாளர் இறந்துபோனார்.

கடந்த ஏப்ரல் மாதம் இரவு தோன்றிய மின்னல் காரணமாக, கல்பாக்கம் முதல் அணு உலை மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப் பல விபத்துகள் நடந்து இருக்கின்றன.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் எப்போதும் ரசாயன நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. ஒரு கையும், காலும் இல்லாத குழந்தையின் அம்மாவிடம் கேட்டேன், ''ஏம்மா... ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனீங்களா? டாக்டர் என்ன சொன்னார்?''

''
எதனால இப்படி ஆச்சுன்னு எங்களையே கேட்கிறாங்க. என்ன பிரச்னை இருக்குன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. என் குழந்தைக்கு விடிவுக் காலமே பொறக்காதா?''

மின்சாரம், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வல்லரசு என்று கதைப்பவர்கள்... இந்தக் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள். மக்களை ஊனமாக்கிவிட்டு, தன்னிறைவு பெற்று என்ன செய்யப்போகிறீர்கள் விஞ்ஞானிகளே?

உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்!


அணு மின் நிலையத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் முழு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்!

அமெரிக்காவில் கதிர்வீச்சால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு Energy Employees Occupational Illness Compensation Program Act இருப்பதுபோல இங்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.

நில நடுக்க அளவு 3-க்கு ஏற்றாற்போல அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்த வேண்டும்!

''மாற்றி யோசிக்கலாமே!''


அணு மின்சாரத்துக்கு மாற்றாகச் சில யோசனைகளை முன்வைக்கிறார் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன்.


''
இந்தியாவிலேயே இரண்டு அணு உலைகள் உள்ள மாநிலம் தமிழகம் மட்டும்தான். மின்சாரத்துக்காக அணு உலை என்று சொல்வது, பீரங்கியைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிப்பது போன்றது! இந்தியாவின் மின்சாரத் தேவை தற்சமயத்தில் 1,70,000 மெகாவாட். ஆனால், நாடு முழுக்க இருக்கும் 20 உலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரமோ வெறும் 4,780 மெகாவாட் மட்டும்தான்!

தமிழகத்தில் மட்டுமே குண்டு பல்புகளை நீக்கி விட்டு சி.எஃப்.எல். பல்புகளைப் பொருத்தினால், சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தினால், பெருமளவு மின்சாரம் மிச்சமாகும்! 2030-ல் நமது நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, நம் மின்சாரத் தேவை 6 முதல் 8 லட்சம் மெகாவாட் ஆக இருக்கும். அணுவைப் பயன்படுத்தி அதில், 6 முதல் 12 சதவிகித மின்சாரத் தேவையைத்தான் பூர்த்திசெய்ய முடியும் என்று அணு சக்தி ஆணையமே தெரிவித்து இருக்கிறது.

மின்சாரத்தை உற்பத்தி செய்து அதைப் பகிர்ந்து அளிக் கும்போது, குறிப்பிட்ட சதவிகிதம் இழக்கிறோம். அதாவது, Transmission & Distribution Loss. உதாரணமாக: 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரித்தால், இறுதிப் பயன்பாட்டுக்கு 8,000 மெகாவாட்தான் நம்மிடம் இருக்கும். 2,000 மெகாவாட் பகிர்ந்தளிக்கும்போது வீணாகிவிடும். 2008-ல் 'வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்' நடத்திய ஒரு கணக்கெடுப்பில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக மின்சார இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் 27 சதவிகிதம் வீணாகிறது. இதைக் குறைப்பதில், கவனம் செலுத்தலாம்!

அணு மின் நிலையம் மூலமாக மின்சாரம் தயாரித்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்பது, அதை ஆதரிப்பவர்களின் முக்கிய வாதம். ஆனால், அது முற்றிலும் தவறு. இயற்கையாகவே யுரேனியம் 238 கிடைக்கிறது. இதைச் செறிவூட்டினால் யுரேனியம் 35 கிடைக்கும். இதைத் தயாரித்தால்தான், அணு உலையின் செயின் ரியாக்ஷன் நடக்கும். இந்த யுரேனியத்தை எடுக்கும்போது கரியமில வாயுக்கள் வெளியேறும். ஆகவே, அணு மின்சாரம் மூலமாகவும் சூழல் கெடத்தான் செய்யும்.

காற்றாலைத் தொழில்நுட்பம், சூரிய ஒளி மின்சாரம், பயோமாஸ் எனப்படும் உயிர்த்திரள், புவிவெப்பச் சக்தி என மரபு சாரா முறையில் மின்சாரம் தயாரிக்கப் பல வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஆபத்து அதிகமான அணு சக்தி மூலம் மின்சாரத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே உலகை நேசிக்கும் அனைவரின் கேள்வி!'' என்கிறார் சுந்தர்ராஜன்.

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் குறைபாடுகளாக அந்தப் பகுதி மக்கள் முன் வைக்கும் பிரச்னைகள்!


அணு சக்திக் கழிவைக் கடலில் கலக்கிறார்கள். அதனால், கடல் நீர் உஷ்ணமாகி, மீன் வளம் குறைகிறது. நிலத்தடி நீர் வளமும் குறைந்துவிட்டது.

அணுக் கழிவுகள் கலப்பதால், கடலில் உள்ள பவளப் பாறைகள் அழிந்துவருகின்றன. அதனால், கடல்சார் சுற்றுச்சூழல் கெடுகிறது.

தைராய்டு புற்று நோய், கரு கலைதல், மூளை வளர்ச்சி இன்றிப் பிறக்கும் குழந்தைகள், கை-கால் போன்ற உறுப்புகள் இன்றி குழந்தைகள் பிறத்தல் போன்றவை கதிர்வீச்சாலும் ஏற்பட்டு இருக்கலாம். மேலும், கதிர்வீச்சுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பணியாற்றுபவர்களுக்கு உயிரணுக்களும் குறைவாக இருக்கின்றன.

அணு மின் நிலையத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில், நிலையத்தில் பணியாற்றுபவர் களுக்கு மட்டுமே அனுமதி. அங்கு யாருக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் கொடுப்பது இல்லை.

அந்த மருத்துவமனையில் அணு சக்தி ஒழுங்குக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி, கதிர்வீச்சு தொடர்பான விபத்துக்களைக் கையாள்வதற்கான சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை. உதாரணம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு நடவடிக்கை பயிற்சி நடத்த வேண்டும் என்பது சட்டம். ஒரு முறை அந்த நடைமுறையின்போது மக்களை அவசரமாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றும் வாகனம் பஞ்சராகி நின்றது. வாக்கி-டாக்கி வேலை செய்யவில்லை!

கதிர்வீச்சு மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சில தகவல்கள்...


கதிர்வீச்சைப் பொறுத்தவரை மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை!

2005-
ம் ஆண்டு ஜனவரியில் எக்ஸ் கதிர்கள், காமா கதிர் கள், நியூட்ரான்கள் போன்றவை புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது!

அணுசக்தித் துறையில் மிகவும் முக்கியப் பிரச்னை, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்தக் கதிர்வீச்சின் தாக்கம் கடல்வாழ் தாவரங்களில் எந்த அளவு இருக்கிறது என்பதை கல்பாக்கம் அணு நிலையத்தார் அளப்பதே இல்லை!

கதிர்வீச்சினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாகக் கண்டறியவே முடியாது என்பதுதான் இன்று நிதர்சனம்! உதாரணமாக, உடலில் கதிர்வீச்சு நேரடியாக ஸ்பரிசிக்காத உறுப்புகளிலும் ஏற்படும் பாதிப்பை By Stander Effect என்பார்கள். கதிர்வீச்சுப் பாதையில் உள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும் பிரச்னை இது!

கூடங்குளம் நிலவரம் என்ன?


நாடெங்கும் அணு மின் நிலையங்கள் அமைப்பதுபற்றி விவாதங்களும், எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், திருநெல்வேலி கூடங்குளத்தில் வருகின்ற ஜூன் மாதம் முதல் அணு மின் நிலையம் இயங்க இருப்பதாகச் செய்தி! அதன் பின்னணி குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார், அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுப. உதயகுமாரன்...


இந்த அணு மின் நிலையத்தை கடல் மணல் கலந்து கட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் நான் ஜெய்தாபூர் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, தாராபூரில் ஒரு ஒப்பந்தக் காரரைச் சந்தித்தேன். அவர் கூடங்குளத்தில் எட்டு ஆண்டுகள் ஒப்பந்தம் எடுத்து வேலை பார்த்தவர். அங்கு நிறுவப்படும் பைப்கள் எல்லாம் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. எளிதில் உடைந்துவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவித்தார். கூடங்குள அணு மின் நிலையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.கே.அகர்வால், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்வதாக முன்பு ஒருமுறை தெரிவித்தார். இந்தத் திட்டம் ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிச் செயல்படுத்துகிற திட்டம். இதுவரை எத்தனை முறை கடன் வாங்கி இருக்கிறார்கள்? அத்தனை கோடி ரூபாய்களுக்கு என்னென்ன செலவுகள் செய்து இருக்கிறார்கள்? ஏற்கெனவே நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் கட்டு மானப் பணிகள் நடைபெறுகின்றனவா? இல்லை தாண்டி விட்டதா? எல்லாம் கேள்விகள்தான்!

ஒரு வருடத்துக்கு முன்பு எஸ்.கே.அகர்வால், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார். அணு மின் நிலைய இயக்குநராக இருந்தவரை, பதவி உயர்வு கொடுத்து, அணு சக்தி தொடர்பான பல்வேறு திட்டங்களில் நல்ல பதவி கொடுத்து, அவரை மாற்றல் செய்தார்கள். அப்படிப்பட்டவர் இறந்துபோன தகவல் குறித்து இதுவரையில் தகவல் வெளிவரவில்லை!

சர்வதேச அணு சக்தி வல்லுநர்கள் குழு (World Association of Nuclear Operators - WANO) சில வருடங்களுக்கு முன்பு கூடங்குள அணு மின் நிலையத்தைப் பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் அந்த அணு மின் நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் கூட இருக்கவில்லை. அவர்கள் என்ன வகையான பரிசோதனைகளைச் செய்தார்கள், எதையேனும் ஆய்வு செய்து விளக்கம் அளித் தார்களா என்பதுபற்றி விவரங்கள் கேட்டு நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப் பித்து இருந்தேன். இதுவரைக்கும் பதில் இல்லை.

இப்போதைய அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி, ஜப்பானில் நடந்த அணு மின் நிலைய விபத்து பற்றி ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறார். சுனாமிக்குப் பிறகான கடல் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் இந்த நிலையத்தைக் கட்டி இருக்கிறோம் என்கிறார். ஆனால், யார் அதை அளந்து பார்த்தது, அணு சக்தித் துறை நீங்கலாக, தன்னாட்சி அமைப்புகள் எதுவும் பரிசோதனை மேற்கொண்டார்களா என்பதைப்பற்றி எந்தக் கருத்தும் கூற மறுக்கிறார்!'' என்கிறார் உதயகுமாரன்!